முதுமையில் நோய்வாய்ப்பட்ட தாயை, பெற்ற மகனே தெருவில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அறிந்து செய்தியாளர்கள் மேற்கொண்ட முயற்சியால் அந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவில் கடந்த ஒருவாரமாக வெயிலிலும், மழையிலுமாக மூதாட்டி ஒருவர் ஒடுங்கிக்கிடந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக உணவும், தண்ணீரும் அருந்தாமல் மூதாட்டி சாலை ஓரத்திலேயே கிடந்திருக்கிறார்.
இதனையடுத்து கோட்டாட்சியருக்கு செய்தியாளர்கள் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் மூதாட்டியின் மகனிடம் விசாரித்தனர். வறுமை காரணமாகவும், தானும், தனது மனைவியும் கூலி வேலைக்கு செல்வதாலும் அம்மாவை பராமரிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
பின்னர் 108 அம்புலன்ஸை வரவழைத்து, மூதாட்டி சண்முகத்தாயை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் மூதாட்டியை பாண்டவர்மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.