யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் அடக்குமுறைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே உறுப்பினர்களினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன் அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று காலை 9:00 மணிக்கு சபை தவிசாளர் ச.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது.
தவிசாளரது தலைமை உரையை தொடர்ந்து சபையில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், நாகர்கோவில் வட்டாரத்தில் இராணுவம் ஐந்து மாதங்களாக இரண்டு காவலரண்களை அமைத்து மக்கள் மீது தொடர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக வட்டார உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
அதேவேளை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக சபை உறுப்பினர் வே.பிரசாந்தன் தெரிவித்தார்.
அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டமைக்கு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தம் பிரசாத் கண்டனம் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.