கல்முனையில் மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தமையால் வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அசமந்தப்போக்காக செயற்பட்டதாகவும் நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்றுகூடிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தெரிய வருகையில், நேற்று வெல்லாவெளி பாக்கியல்ல - சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய மாசிலாமணி சிவராணி என்பவர் குழந்தை பேறுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைப் பேறுக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையை பிரசவித்த பின் தாய்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாகவே குறித்த பெண் இறந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐவர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.