திருகோணமலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட இரு பகுதிகளில் இருந்து இன்று(13) வைத்தியர் ஒருவர் உட்பட 8 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
மாலிந்துறை கிராம சேவகர் பிரிவில் இருந்து 5 நபர்களும் 2021.01.11 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவின் ஹிஜ்ரா வீதியில் இருந்து 3 நபர்களும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று (13) பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து 42 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டார்.
இதேவேளை கடந்த 2021.01.10 ஆம் திகதி PCR பரிசோதனைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் 3 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஹிஜ்ரா வீதியைச் சேர்ந்த முன்னர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதன்னிலை தொடர்பாளர்களாவர்.
இதன்படி எமது சுகாதாரப் பிரிவில் 8 நபர்கள் வைரஸ் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக 42 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.