ஈரானின் ஆளில்லா விமானமொன்றை ஹார்முஸ் ஜலசந்தியில் சுட்டுவீழ்த்தியுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க கடற்படை கப்பலிற்குஅச்சுறுத்தல் விடுக்கும்வகையில் குறிப்பிட்ட விமானம் செயற்பட்டதை தொடர்ந்தே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பே இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஆளில்லா விமானம் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பொக்சரிற்கு மிக அருகில் சுமார் 100 மீற்றர் தூரம் வரை நெருங்கி சென்றது என தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட ஆளில்லா விமானம் பல எச்சரிக்கைகளை புறக்கணித்தது எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் நடமாடும் உலக நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்டுவரும் சீற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இதுவுமொன்று என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு தனது கடற்படையினர்,கப்பல்கள் நலன்களை பாதுகாப்பதற்கான உரிமையுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.